Saturday, May 12, 2012

வெளவாலை வாவென்று கூறி.......


இரு இறகுகளுடன் பறவையாக சிறகடித்து பறந்து திரிந்தாலும் வெளவால்  ஒரு மிருகம் என்றே சொல்கிறார்கள்.


மிருகம் பாதி பறவை பாதி கலந்து செய்த உருவம். எனக் கூறலாமா?
அதிலும் இது ஒரு பாலூட்டி மிருகம் என்பது குறிப்படத்தக்கது. உலகெங்கும் உள்ள பாலூட்டிகளில் 20 சதவிகிதத்தை வெளவால்கள் பிடித்துள்ளன.

இராப் பட்சி என்ற பெயரும் உண்டு.  வாவல், வெளவால், எனவும் சொல்வார்கள்.

இருட்டில் கண் தெரியுமா?

"மாலையான பின்தான் இதற்குக் கண் தெரியும் அதன் பின்தான் பறந்து திரியும்" என்று பலரும் நம்பினாலும் இது தவறான கூற்று என விஞ்ஞானிகள் செய்த ஆய்வு சொல்கிறது.

சில வெளவால்களின் கண்களைக் கட்டி பறக்கவிட்டபோது அவை நன்றாகவே தடைகளைத் தாண்டி பறந்து சென்றன. பின்பு இவற்றின் காதுகளையும் வாயையும் கட்டிவிட்டுப் பறக்கவிட்டபோது தட்டுத்தடுமாறி மோதி பறந்து திரிந்தன. இதன் மூலம் விஞ்ஞானிகள் இவைகள் பறப்பதற்கு கண் முக்கியமல்ல கீச்சிடுவதற்கு வாயும் எதிரொலிகளைக் கேட்பதற்கு காதும் இருந்தால்  அவற்றால் பறக்க முடியும் என்பதை அறிந்தார்கள்.

அல்ராசோனிக் சவுண்ட் ஓசையைக் ஒலித்துக்கொண்டுதான் இவை பறக்கின்றன. இவை பறக்கும்போது முன்னால் உள்ள பொருளில் மோதி திரும்பவும் அவ்வொலி இவற்றின் காதுகளை அடையும். இவ்வோசையை வைத்து வெளவால்கள் முன்னால் இருக்கும் பொருளை அறிந்து கொள்கின்றன. இதை எக்கோ லொக்கேஷன் என்கிறார்கள்.

வாழுமிடங்கள்


குகைகள், மரப்பொந்துகள், அடர்ந்த மரங்கள், மண்டபங்களின் இருட்டான இடங்களில் தலைகீழாகத் தொங்கி சிறகுகளால் முகத்தை மூடித் தூங்கிவிடும்.



பெரிய இலைகளைப் பறித்து கூடு கட்டி அதில் வாழும் இனமும் இருக்கிறது. அதிக கனமான இறக்கைகள்தான் அவை தலைகீழாகத் தூங்க காரணம்.



வெளவால்களின் உணவு

கூட்டம் கூட்டமாக ஒரே இடத்தில் வாழும் இனம். பழங்கள் பூக்கள், புழு, பூச்சிகளை உண்ணும் பிராணி. ஓர் சில மீன், தவளை உண்ணும் வெளவால்களும் இருக்கின்றன.


  • பூச்சி புழுக்களை உண்ணும் வெளவால்களே அதிகமானவை 70 சதவிகிதம் அவ்வாறானவை. 
  • 20 சதவிகிதம் மட்டுமே பழங்களை உண்பவையாகும்.

1000 ற்கும் மேற்பட்ட இனங்கள் இருக்கின்றன என்கிறார்கள்.

இரத்தம் குடிக்கும் வெளவால்கள்

பயப்படாதீர்கள் விலங்குகளின் இரத்தம் குடித்து வாழும் இனமும் இருக்கின்றன. இவற்றை வம்பயர் vampire bats என்கிறார்கள். இதில் மூன்று வகைகள் உண்டு.


  1. Common Vampire bat, 
  2. White winged Vampire bat, 
  3. Hairy legged Vampire bat  
ஆகியனவே அவையாகும்.

இவை அமெரிக்க நாடுகளான மெக்சிகோ, பிரேசில், சிலி, ஆர்ஜன்ரீனா ஆகிய நாடுகளில் காணப்படுகின்றனவாம். இவை பெரும்பாலும் பாலுாட்டி மிருகங்களின் இரத்தத்தையே உணவாகக் கொள்கின்றன. ஒரு சில மனித இரத்தத்தையும் உணவாகக் கொள்ளும். கடுமையான இருளில் பறக்கும் இவை மிக மெல்லிய சத்தத்தையே எழுப்பிப் பறக்கும் தன்மை கொண்டவை.


சூழலுக்கு உதவுபவை

தாவரப் பரம்பலுக்கும், (விதைகளை பரவச் செய்தல்) பூக்களின் மகரந்தச் சேர்க்கைக்கும் உதவும் பிராணியாகவும் வெளவால் இருக்கிறது. துருவப் பிரதேசம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் வாழும்.

உடலமைப்பு

வெளவால்களின் இறக்கைகள் 6 அங்குலம் முதல் 6 அடிகள் வரை இருக்கும். இதன் கால்கள் சிறியனவையாக வலிமையற்று இருக்கும். காதுகள் நீண்டு இருக்கும். பற்கள் கூரியனவாக இருக்கும்.

பூமியில் 6 கோடி வருடங்களுக்கு மேலிருந்தே வெளவால்கள் வாழ்ந்து வருவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

வெளவால் தீவு  

மத்திய அமெரிக்காவில் பனாமாவில் பாரோகொனராரோ தீவு இது வெளவால் தீவு என்றே அழைக்கப்படுகிறது. இங்கு ஆயிரக்கணக்கான வெளவால்கள் சிறகடித்துப் பறக்கின்ற ஓசைகளை இரவானதும் கேட்கலாம். 74 வகையான வெளவால் இனங்கள் இங்கு இருக்கின்றன என்கிறார்கள்.

விமானத்தில் ஏறிப்பறக்க ஆசைப்பட்ட ஒரு வெளவாலாரால் பயணிகள் போட்ட கூச்சலால் விமானமே திருப்பப்பட்டதாம். ஐயோ! பாவம் வெளவாலாருக்கு ஏமாற்றம் நீண்ட தூரம் விமானப் பயணம் செய்ய முடியவில்லையே. இருந்தாலும் அவர் ஹீரோதான்.


பட்ஸ்மன் (Bat man) பற்றியும் சொல்லாவிட்டால் எப்படி? படங்கள் சிறுவர்கள் பெரியவர்களை ஆகர்ச்சித்து இழுத்திருக்கினறன.

பட் ப்ளவரும்;(Bat flower) பூத்துக் குலுங்குகிறது பாருங்கள்.


வெளவால் மீன் ;(Bat fish) இருப்பது தெரியும்தானே. அது உணவாக உண்ணப்படும் மீனாகும்.


வெளவால் செட்டை அடித்துப் பறக்கும் அதன் கீழ் சுகமாய் தூங்க ஆசையா? இதோ அனுபவிப்போம் வாருங்கள்.



ஆபத்தான வெளவால்கள்

வெளவாலின் மிக ஆபத்தான அம்சம் அது நீர்வெறுப்பு நோயைப் (Rabies) பரப்பக் கூடியது என்பதுதான். மிகக் குறைந்த அளவு (5%) ற்குக் குறைவானவையே அவ்வாறு பரப்பும் என்கிறார்கள். அமெரிக்காவில் நீர்வெறுப்பு நோய்க்கு ஆளானவர்களில் பெரும்பாலானவர்கள் வெளவாலால் கடியுண்டவர்களாகும். ஆனால் இலங்கையில் அவ்வாறு பரவுவதாகத் தகவல்கள் இல்லை.காரணம் இங்கு அத்தகைய வெளவால்கள் இருப்பதாகத் தகவல் இல்லை.

காப்பாற்றுங்கள் வெளவால்களை

கவலையான விடயம் உண்பதற்காக வேட்டையாடப்படுவதாகும். தடை செய்யப்பட்டிருந்தாலும் அதையும் மீறி சிலர் இவற்றை வலை வீசி பிடிப்பதுதான் கொடுமை.

'மரம்பழுத்தால்  வெளவாலை வாவென்று கூறி இரந்து அழைப்பார் யாருமிலர்'

மாதேவி