Wednesday, December 21, 2011

பூப்பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை.


மார்கழிப் பூவே... மார்கழிப் பூவே...



பாடிக்கொண்டே ஆரம்பிப்போமா ?

மலர் என்றாலே நினைவுக்கு வருவது இனிய நறுமணம், அழகு, மென்மை, காதல்.

சங்கப் பாடல்களிலே மலர்களை பெண்களுக்கு உவமையாக வர்ணித்திருப்பதைக் காணலாம்.

காந்தள்

காந்தள் கையழகி, ரோஜா வதனத்தாள்.....

செண்பகம்

நொச்சி, தும்பை, கொன்றை, பாதிரி, புங்கை,  குரந்தை, வாகை, வெட்சி, குறிஞ்சி மலர், இருவாட்டி, அரளி, முல்லை, பிச்சி, மல்லிகை, பன்னீர், ஆம்பல், அல்லி, குமுதம், தாளம்பூ, செண்பகம், மனோரஞ்சிதம், சம்பங்கி, ரோஜா, துளசி, பவளமல்லி, நந்தியாவட்டை, சாமந்தி,சூரியகாந்தி,மந்தாரை எனப் பற்பல மலர்கள் பூத்து மணம்பரப்பி நிற்கின்றன.

மனோரஞ்சிதம்

மகிழம்பூ, செண்பகப்பூ, மரிக்கொழுந்து, நாகலிங்கப்பூ, புன்னை, செவ்வரத்தை, கனகாம்பரம், என அடுக்கிக் கொண்டே போய்,  ஓர்க்கிட், எகஸ்சோரா, போகன்விலா, அந்தூரியம் எனப் பலப்பல உருவாக்கங்கள் இழுத்துக் கொள்ளுகின்றன எம் மனங்களை.

நாகலிங்கப்பூ

சங்கப் பாடல்களில், மிகவும் புகழ்பெற்ற குறிஞ்சி மலர் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மலரும் என்பது பலரும் அறிந்ததுதான். மலைச்சாரலிலே பலவகையான பூக்கள் இருந்தபோதும் தேன் நிறைந்த இம் மலருக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்.

குறிஞ்சிப்பூக்கள்

குறிஞ்சி செடிகளின் தலையில் நீலநிறப் பூக்கள் மணியைக் கவிழ்த்தாற்போல காட்சி கொடுப்பதாக கவிஞர் ஒருவர் சொல்கின்றார். இம் மலரில் இருநூற்றி ஐம்பது வகைகள் இருப்பதாக கூறுகின்றார்கள். ஐம்பத்தொன்பது வகை தென்னிந்தியாவில் உள்ளது என்கிறார்கள்.குறிஞ்சி மலரின் தேன் மருத்துவத்தில் அதிக இடத்தைப் பிடிக்கின்றது. அதனால்தான் குறிஞ்சித் தேனுக்கு அதிக கிராக்கி. 

நிலங்களை ஐந்நிலங்களாக பூக்களின் பெயர்களாலேயே குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் எனப் பிரித்திருந்தார்கள்.

குறிஞ்சிப் பாட்டில் பூக்களின் பெயர்கள் நிறைந்த பாடல் இருக்கின்றது. அரசர்கள் போரில் வெற்றிபெற்று திரும்பும்போது வாகை மலர்மாலை சூடி வருவார்கள்.

அரசிமார் தாளம்பூ ஜடை போட்டிருப்பார்கள்.

பெண்கள் தலையில் சூடிக்கொண்டார்கள். காதலின் பரிசாகவும் பூக்கள் பண்டைய காலம்தொட்டு; அங்கம் வகிக்கின்றன. பூக்களை மாலையாகக் கட்டி திருமணநாளில் அணிந்து கொண்டனர்.  பூக்களை மாலையாகத்தொடுத்து இறைவனுக்கு சாத்தி வணங்கினர். பின்னர் பெண்கள் பூச்சரங்கள், கதம்பங்கள், மாலைகள் எனத்தொடுத்து அணிந்தார்கள்.

'கார்நறுங்கொன்றை' என கொன்றையைப் புகழ்ந்து பாடியுள்ளார் கவிஞர். முல்லைக்கு தேர்கொடுத்த பாரிவள்ளலையும் அறிவோம்.

அனிச்சம்

அனிச்சம் பூவை விருந்தினருக்கு உவமையாக 'மோப்பக் குழையும் அனிச்சம்'என்கிறார் வள்ளுவர். 

குவளை மலரின் மணம் வீசுகின்ற திரண்ட கரிய கூந்தலையும், ஆம்பல் மலரின் மணம்; தரும் பவள வாயினையும் உடையவளே என்றெல்லாம் காதலன் காதலியை வர்ணித்திருப்பதைக் காணலாம்.

அல்லி, ஆம்பல் இனத்தில் ஐம்பது வகையான கொடிகள் உள்ளன.
மல்லிகை( JASMINUM SAMBAC) இருநூறு இனங்கள் உள்ளன என்கிறார்கள்.

வேறோரிடத்தில் காதலன் காதலியைப் பிரிந்து செல்கின்றான் 'நெய்தல் மலர்போன்ற அவளது கண்' என்கூடவே வருகின்றதே என நினைக்கின்றான.;
நாட்டுப் பாடல்களிலும், சிறுவர் பாடல்களிலும் பூக்கள் தனியிடம் பிடித்துள்ளன.

நறுமண மலர்களிலிருந்து அத்தர், பன்னீர், ரோஸ் எசன்ஸ் செய்து கொள்கிறார்கள்.

இறைவனுக்கு அர்ச்சிக்கும் பூக்கள் சிறந்த இடத்தை வகிக்கின்றன. காட்டுப்பூக்கள், மயானப்பூக்கள், நீர்ப்பூக்கள், செடிப்பூக்கள், கொடிப்பூக்கள், மரப்பூக்கள் எனப் பலவகையாக இருக்கின்றன.

இமையமலைச் சாரலில் பல்வகையான அரிய அழகிய பூக்கள் காணப்படுகின்றன.

பூக்கள் பல மருத்துவ குணங்களையும் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றன. அதனால்தான் பல்நெடும் காலமாக மருத்துவத்தில் பயன் படுத்தி வருகின்றார்கள். உணவாகவும் உட்கொள்ளப் படுகின்றன. 'டேன்டேலியன் மலர்கள்' வைனாக தயாரிக்கப் படுகின்றன. 'ஹாப்ஸ் மலர்கள்' பீரை சுவையூட்டப் பயன்படுத்தப்படுகின்றன.

ஓணம் பண்டிகையில் பூ அலங்காரம் முக்கிய இடத்தை வகிக்கின்றது.
மார்கழியில் கோலத்தில் பிள்ளையார் வைத்து  பூசணிப்பூக்களால் வணங்குவார்கள்.

தைப்பொங்கலன்று ஆவாரம் பூக்கள், கண்ணுப் பூக்களை வீட்டு வாயிலில் வைப்பார்கள்.ஆவாரம் பூவின் மஞ்சள் நிறம் மங்கலத்தின் அடையாளமாகக் கொள்ளப்படுகின்றது.

ஐம்பதாண்டுகளுக்கு ஒருமுறை மலரும் பூ கார்ட்ஸ் என்கிறார்கள்.

நெப்பந்திசு (NEPENTHES)    பூச்சியை உண்ணும் தாவரம். இது ஒருவகை குடுவைபோன்ற தோற்றத்தை உடையன. பூக்களின் முனைகளில் நீண்ட மயிர்கள் நீட்டிக் கொண்டிருக்கும்.

நெப்பந்திசு

பூக்களின் கவர்ச்சியாலும், தேனாலும், வாசனையாலும் ஈர்க்கப்படும் பூச்சிகள் மயங்கி பூவினுள் செல்லும். பூவின் வழுவழுப்பான சுரத்தலினால் பூச்சிகள் குடுவையின் உள்ளே விழுந்து விடும். பூச்சிகள் வெளியே வரமுடியாதவாறு பூக்களின் உள்நோக்கி வளைந்திருக்கும் மூடிகள் தடுத்துவிடுகின்றன.

அதிக அளவில் ஒரே தடவையில் பூக்கும் பூக்கள் வைனீஸ்விக்டோரியா என்ற தாவரத்தில் பூக்கின்றன.

ஐம்பதாண்டுகளுக்கு ஒருமுறை மலரும் பூ 'கார்ட்ஸ்' என்கிறார்கள்.

உலகின் மிகச் சிறிய மலர் 'வொல்பியா ' எனப் படுகின்றது. இவை குலைவடிவில் இலகுவாக வீழ்ந்து விடக் கூடியதாக இருக்கின்றன. இதில் இரண்டுவகை இனங்கள் உள்ளன..

கிளிபோலவே சொண்டு தலை, வால் என அச்சொட்டாக ஒரு பூ தாய்லாந்து தேசத்தில் இருக்கிறது. கிளிப்பூ (Parrot Flower) என அழைக்கப்படும் இது அங்கும் இப்பொழுது அரிதாகவே காணப்படுகிறதாம்.

கிளிப்பூ


இயற்கையின் படைப்பில் பூக்கள் எவ்வாறேல்லாம் அதிசயிக்க வைத்து மகிழ்ச்சி தருகின்றன..



பூக்களின் சமையலுக்கு பூக்களைப் பறியுங்கள்  பதிவைக் கிளிக்குங்கள்.

:-மாதேவி-:
0.0.0.0.0.0.0