Thursday, June 30, 2011

தொல்லியல் எச்சமாகுமா யாழ் கோட்டை ?

யாழ்ப்பாண வரலாற்றின் சின்னமாக விளங்குகிறது யாழ் கோட்டை. யாழ் கடல் நீரேரியின் கரையில் இது அமைந்துள்ளது. ஆறு நூற்றாண்டுகளைக் கடந்துவிட்ட நீள் வரலாறு அதில் அடங்குகிறது.

கடந்த தூரம் நீளம்

ஒல்லாந்தரால் அமைக்கப்பட்ட கோட்டை பாதுகாப்புக்கு ஏற்ற வகையில் மிகவும் பலமானதாகவும். அற்புதமானதாகவும் கட்டப்பட்டிருந்தது. கீழைத்தேச நாடுகளிலுள்ள கோட்டைகளில் யாழ்கோட்டை பலமானதாகவும், சிறந்ததாகவும் இருப்பதாக கட்டிடக் கலை நிபுணர்கள் எடுத்துரைத்திருக்கிறார்கள்.




முதலில் முஸ்லீம்களின் சிறிய பண்டகசாலையாக இக்கோட்டை இருந்ததாகவும் பின்னர் போர்த்துக்கேயர் அப் பண்டகசாலையை நாற்சதுரக் கோட்டையாக விரிவுபடுத்தியதாகவும் சில செய்திகள் கூறுகின்றன.

மாறாக சோழர் காலத்து மண்கோட்டையானது போர்த்துக்கேயரால் கற்கோட்டையாக  நவீனப் படுத்தப்பட்டதாகவும் வேறு சிலர் கூறுகின்றனர்.

போர்த்துக்கேயரின் யாழ்    கோட்டை (நன்றி தினகரன்)

1625ம் ஆண்டு போத்துக்கேயரால் கட்டப்பட்டது. 1680ல் ஒல்லாந்தரால் ஐங்கோண புதுவடிவில் கட்டப்பட்டது.


1680ல் ஒல்லாந்தரால்...

பின் 1795ல் ஆங்கிலேயர் வசம் வந்தது.


யாழ்ப்பாண கோட்டையின்     அமைப்பு (நன்றி தினகரன்)

 5 கொத்தளங்களைக் கொண்டதாக இருந்தது. கடல்நீர் ஏரியை அண்டி இரு கொத்தளங்களும், நிலத்தை அண்டி 2 கொத்தளங்களும் அமைந்திருந்தன. இந்தக் கொத்தளங்கள் உயர்ந்த மதில்களால் இணைக்கப்பட்டிருந்தன.

அடிப்பகுதி 40 அடி, உச்சியில் 20அடி. சுற்றிவர அகழி

கோட்டை மதில் அடிப் பகுதியில் 40அடி அகலமானதாகவும், உச்சியில் 20 அடி அகலமாகவும் அமைக்கப்பட்டிருந்தது. மதிலின் வெளிப்பக்கமாக முருங்கைக் கற்களால் அமைக்கப்ட்ட 4 அடிக் கட்டமைப்பு இருந்தது. உட்கோட்டையைச் சுற்றி நீராழி ஓடிக்கொண்டிருக்கும். கோட்டையைச் சுற்றியிருக்கும் 132 அடி அகலமான அகழியிது.

முதல் அரண்

 கோட்டை வாயில் பலம்வாய்ந்து இருந்ததாகத் தெரிகிறது. நீராழிக்கு வெளியேயும் கோட்டை மதில், பெரிய வாயில் இருந்ததற்கான அடையாளங்கள் இப்பொழுதும் இருக்கின்றன.

நான்கு தாழ் கொத்தளங்கள் வெளி மதிற்சுவரோடு இருந்ததாகவும், 19 காவல் அரண்கள் அமைக்கப்பட்டிருந்ததாகவும், பத்தடிக்கு ஒரு பீரங்கி இருந்ததாகவும் வரலாறுகள் சொல்கின்றன. இராணுவ பாதுகாப்பிற்கும், நிர்வாக நடவடிக்கைகளுக்கும் கோட்டை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

கோட்டை கதவைத் தாங்க பலமாக கொளுக்கி

கோட்டையின் வெளி வாயிற் கதவு 6 அங்குலத்திற்கு மேல் தடிப்பானதாக இருந்ததாகவும் போர் யானைகள் முட்டி உடைக்காதிருக்க கூடான ஈட்டிகள அதில் பொருத்தப்பட்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

யாழ் கோட்டையிலிருந்த    ஒல்லாந்தத் தேவாலயம் (நன்றி தினகரன்)

கோட்டையின் தென் கிழக்குப் பகுதியில் சதுரங்கத் தேவாலயம் முன்பு இருந்தது. இப்பொழுது அழிக்கப்பட்டுவிட்டது.

கோட்டை இரண்டு வாயில்களைக் கொண்டிருந்தது. ஒன்று நீர்ப்பாதை. மற்றையது நிலப்பாதை. நீர்ப்பாதை கடலோரமாக அமைந்திருந்தது. நில வழிப் பாதையில்தான் பிரதான வாயிற்புறம் அமைந்திருந்தது. இது தொங்கு பாலத்தினால் தரையுடன் இணைக்கப்பட்டிருந்தது.

ஆங்கிலேயர் காலக் கோட்டைக்குள் கவர்னர் பங்களா, ராணி மாளிகை, சிறைச்சாலை என்பன இருந்தன. பிற்காலத்தில் கைதிகள் விசாரிக்கப்படும் இடமாக ராணி மாளிகை மாறியது.

எமக்குத் தெரிய சிறைக் கைதிகளை அடைத்து வைக்கும் இடமாக இருந்தது. பள்ளிச் சுற்றுலாவில் சென்று பார்த்திருக்கிறோம்.

பயமுறுத்தும் தூக்குமேடைக் கட்டிடம்

தூக்கில் இடுவதற்கான தூக்குமேடைக் கட்டிடம் இன்றும் காணக் கூடியதாக இருக்கிறது.

கோட்டையை அண்டிய பகுதியில் 600- 700 வருடங்களுக்கு முந்தியதாகக் கருதப்படும் ஈமச் சின்னம் மனிதர்கள் முறையான விதத்தில் அடக்கம் செய்யப்பட்ட இடம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது விஞ்ஞான ஆய்விற்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது.




பல மட்பாண்டங்கள் தாழிகள் உட்பட பெருமளவு பொருட்கள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இவை 12ம் 13ம் நூற்றாண்டாம் காலத்தைச் சேர்ந்த சீன மட்பாண்டப் பொருட்கள் எனச் சொல்கிறார்கள்.

யாழ். பல்கலைக்கழக தொல்லியற்துறைத் தலைவர் பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்கள் தலைமையில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.




யாழ்ப்பாணக் கோட்டையின் அகழ்வாராய்ச்சியின் போது ஒல்லாந்தர் காலத்துக்கு முற்பட்ட தொல்லியற் சின்னங்கள் மீட்கப்பட்டதாக இவ்வருட ஆரம்பத்தில் செய்திகள் வெளியாகின. பாண்டியர், பொலநறுவை மன்னர் கால நாணயங்களும் கிடைத்ததாகத் தெரிகிறது. புராதனகால சுக்கா, நாணயங்கள், மட்பாண்ட ஓடுகளும் கிடைத்ததாகப் பத்திரிகைகள் தெரிவித்திருந்தன.

தொல்லியல் எச்சமாக மறைந்து போன எமது  பாரம்பரியப் பொருட்களில் விரைவில் யாழ்கோட்டையையும் சேர்ந்து கொள்ளுமா?